தாய்-மகன் கொலை: கொலையாளியின் காதலி கேரளாவில் கைது
சென்னை: சென்னை அசோக்நகரில் தாய், மகன் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் காதலியை போலீஸார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி. இவரது கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அனந்தலட்சுமியும், அவரது 13 வயது மகன் சூரஜூம் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவரது செல்போன் மற்றும் நகைகள் திருடு போயிருந்தன.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை துவக்கினர். தற்போது விசாரணையில் போலீஸாருக்கு கொலையாளி குறித்து துப்பு துலங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த கொலை வழக்கில் மூன்று கோணங்களில் விசாரணை மேற்கொண்டோம். முதலில் அனந்தலட்சுமியின் கணவர் மீது சந்தேகம் வந்தது. ஆனால், அவரை பற்றி விசாரிக்கையில் நேர்மையானவர், மனைவி, மகன் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதான சந்தேகம் விலகியது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை ஜோசியர் சந்தோஷ்குமார் என்பவர் அனந்தலட்சுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அவர் உங்களது கணவரின் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. அதனால் இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் என கூறியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் விசாரித்தோம். ஆனால், அவர் குற்றவாளி அல்ல என்பது தெரியவந்தது. இருந்தாலும் அவரை தொடர்ந்து எங்களது பார்வைக்குள் வைத்திருக்கிறோம்.
இந்நிலையில் அனந்தலட்சுமியின் மொபைலுக்கு வந்த அழைப்புகளை வாங்கி விசாரணையை துவக்கினோம். அப்போது அவர் ராமசுப்பிரமணியத்தின் நண்பர்கள் கணேஷ், வேல்முருகன் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோரிடம் அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது எங்களது சந்தேக பார்வை திரும்பியது. அவர்களில் கணேஷ், வேல் முருகன் ஆகிய இருவரிடமும் அனந்தலட்சுமி அடிக்கடி பேசி வந்துள்ளார்.
கணேஷ், ராமசுப்பிரமணி வேலை பார்க்கும் நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை பார்க்கிறார். வேல் முருகன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து விலகிவி்ட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தோம். ஆனால், கணேஷ், கிறிஸ்டோபர் இருவர் மட்டுமே விசாரணைக்கு வந்தனர். வேல்முருகனை காணவில்லை.
அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விசாரித்தோம். ஆனால், அவர் அங்கும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து அவரை பற்றி தொடர்ந்து விசாரித்தோம்.
அப்போது ஈக்காட்டு தாங்கல் பகுதியில் வசித்து வந்த வேல்முருகனுக்கு ஒரு காதலி இருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் பெயர் தானியா. கேரளாவை சேர்ந்தவர்.
வேலையில்லாத காரணத்தால் வேல்முருகன் தானியாவின் தங்க சங்கிலியை வாங்கி ரூ. 30,000க்கு விற்று செலவு செய்துள்ளார். நகை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தானியா நீண்ட நாட்கள் ஆனதால் அவரிடம் நகையை திருப்பி கேட்டுள்ளார்.
வேல்முருகனிடம் இருந்து போதிய பதில் கிடைக்காததால் அவர் கோபித்து கொண்டு கேரளா சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு சென்று தானியாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானியா, வேல்முருகன் சமீபத்தில் வந்து ரூ. 30,000 பணத்தை கொடுத்துவிட்டு சென்றதாக தெரிவித்தார். அது தனக்கு வேண்டிய ஒருவரின் நகையை விற்று அதன்மூலம் கிடைத்தாக கூறினார்.
இதையடுத்து வேல்முருகன் தான் நகைக்காக அனந்தலட்சுமியை கொன்றுள்ளதாத சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
மேலும், அனந்தலட்சுமி, சூரஜ் இருவரையும் ஒரே நபர் கொல்லவில்லை என்பதும் இருவர் சேர்ந்து கொன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வேல்முருகனுடன் இணைந்து கொலை செய்தது தானியாவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளோம்.
தானியா வைத்திருந்த ரூ. 30,000த்தை மீட்டுள்ளோம். மேலும், போலீஸார் வேல் முருகன் குடியிருந்த ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் இருக்கும் அடகு கடைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேல்முருகனை தொடர்ந்து தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications