டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி புதிய தமிழகம் நாளை பேரணி
சென்னை: ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை புதிய தமிழகம் கட்சியினர் டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றனர்.
இது குறித்து கிருஷ்ணசாமி நேற்று சென்னையில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை முள்வேலி முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் உணவு, குடிநீர், உடை, உறையுள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது உச்சக்கட்ட மனித உரிமை மீறல் பிரச்சினை ஆகும்.
தமிழர்களை முள்வேலியில் அடைத்து வைத்த சம்பவத்திற்கு மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இதுநாள் வரை இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
இதை கண்டிக்கும் வகையிலும், முடங்கிக்கிடக்கும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டியும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கோரியும் நாளை 02.10.09 அன்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடைபெறும்.
பேரணியின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினச்சம்பளமான 100 ரூபாயை முறையாக வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் அவர்களிடம் இது குறித்து மனு கொடுப்போம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதிய தமிழகம் தொண்டர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications