ராமேஸ்வரம், நாகையில் சூறாவளி: கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் நாகை கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு காணப்படுகிறது. பலத்த வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசுவதால் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
16 நாட்களாக வேலைநிறுத்தம் முடித்து வேலைக்கு திரும்ப நினைத்த மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்றும் தொடர்ந்து 2வது நாட்களாக பலத்த சூறாவளி வீசியது.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் படகுகள் கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு மீன்பிடி டோக்கனும் வழங்கப்படாது என மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் சுமார் 60 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தள்ளாடின.
தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்தவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினார்கள். சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், சில பயணிகளின் அரசின் தடையை மீறி குளித்தனர்.
சூறாவளி காரணமாக கடற்கரை அருகே இருந்த சாலை பகுதிகள் மணலால் மூடப்பட்டன. இதனால் வாகனத்தில் சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் இயக்கப்பட்ட ரயில்களும் பாதுகாப்பு கருதி குறைந்த வேகத்தில் சென்றது.
கடந்த 16 நாட்களாக இலங்கை ராணுவம் தாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்திய அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையி்ல சூறாவளியால் அவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இன்றும்...
இன்றும் காலை முதல் ராமேஸ்வரம் மற்றும் நாகையில் பலத்த காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்களால் கடலுக்குள் போக முடியவில்லை.
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துரை, வேதாரண்யம் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை.