திமுக அமைசசர்கள் என்ன போஸ்ட்மேன்களா - டி.ஆர். ஆவேசம்
சென்னை: போல்டுமேன் என்று பட்டம் வாங்க வேண்டிய திமுக அமைச்சர்கள் கருணாநிதி கொடுக்கும் கடிதத்தை எடுத்துச் செல்லும் போஸ்ட் மேன்களாக பணிபுரிகிறார்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்வதை கருணாநிதி நிறுத்திவிட்டு, மத்திய அரசிற்கு கடிவாளம் போட முன்வருவாரா? என்று கேட்டுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
ராஜேந்தர் இன்று தனது பிறந்த நாளை கட்சி அலுவலகத்தில் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கேரள அரசு அதை மதிக்காமல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.
அந்த பிரச்சனை முடிவதற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டு வதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக உறுதிபடுத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழக அரசுக்கு எந்த உறுதிமொழியும் கொடுக்க வில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். இப்படி மத்திய அமைச்சரவையில் பொறுப்புள்ள ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருப்பது உண்மையா? இல்லையா? என்பதை முதல்வர் கருணாநிதி தெளிவு படுத்துவாரா?.
மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு மந்திரி பதவி கொடுத்து விட்டு, தமிழர்களுக்கு எதிராக பல அநீதிகளை இழைத்து வருகிறது. திமுகவும் அதை வாயை மூடி பார்த்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் தென் மாவட்ட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக் கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா?.
போல்டுமேன் என்று பட்டம் வாங்க வேண்டிய திமுக மந்திரிகள் கருணாநிதி கொடுக்கும் கடிதத்தை எடுத்துச் செல்லும் போஸ்ட் மேன்களாக பணிபுரிகிறார்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்வதை கருணாநிதி நிறுத்திவிட்டு, மத்திய அரசிற்கு கடிவாளம் போட முன்வருவாரா?.
டெல்லியில் உண்ணா விரதம் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை நான் பாராட்டுகிறேன். என்னால் அங்கு சென்று போராட முடியாவிட்டாலும் இங்கு இருந்து கொண்டு போராடுவேன்.
இலங்கை தமிழர்களுக்காக மாநில சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை தூக்கி எறிந்தேன். ஆனால் திமுகவோ ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட இழக்கவில்லை. இது தான் உண்மை நிலவரம்.
தமிழனத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் திமுக தலைவர் கருணாநிதியின் எண் ணத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார் ராஜேந்தர்.