மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் மீதான வழக்கு - பாக். கோர்ட் ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிரவாத சம்பவத்தில் முக்கியத் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல் பிரிவு தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிப் போட்டுள்ளது பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு கோர்ட்.
ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீது பாகிஸ்தான் விசாரணை அமைப்பு தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் விசாரணையை தொடங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இவர்கள் மீது செப்டம்பர் 26ம் தேதி குற்றச்சாட்டுக்கள் முறைபப்டி பதிவு செய்யப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியிருந்தார். ஆனால் அன்று அது செய்யப்படவில்லை. மாறாக அக்டோபர் 3ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி விடுமுறையில் போய் விட்டதாக கூறி ஒத்திவைத்தனர்.
இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறுபடியும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வழக்கு ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை கோர்ட் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications