ரூ. 1000 கோடி காகித ஆலை விரிவாக்கம்-ஸ்டாலின் அடிக்கல்
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் ரூ.1000 கோடி விரிவாக்க திட்டத்துக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் விரிவாக்க திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று அங்கு நடந்தது. இதில் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் ரூ. 1000 கோடி செலவிலான விரிவாக்க பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை கூட்டத்தில் மானிய கோரிக்கையின் போது இந்த நிறுவனத்தையும் நவரத்னா நிறுவனமாக மத்திய அரசுமாற்ற வேண்டும் என குறிப்பிட்டேன்.
1979ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்ட்ட இந்த நிறுவனம் 1984 முதல் காகித உற்பத்தி செய்து வருகிறது. தற்போது வெள்ளிவிழா கொண்டாடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கரும்பு சக்கையிலிருந்த காகிதம் தயாரிக்கும் இந்த ஆலை இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
2007-08ம் நிதியாண்டில் ரூ. 107.37 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 24.09.09 அன்று இந்த நிறுவனத்தின் சார்பில் லாப தொகையில் ரூ. 11 கோடியே 2 ஆயிரத்து 50 தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி, சர்வதேச அளவில் வர்த்தகம் குறைவு என பல பிரச்சினைகள் இருந்தாலும் வெள்ளி விழா ஆண்டு என்பதால் சில அறிவிப்புகளை இங்கே வெளியிடுகிறேன்.
அண்ணா பிறந்தநாள் விடுமுறை...
இங்கு இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் 24 காரட் தங்க நாணயம் இங்கே வழங்கப்பட இருக்கிறது. 1,812 நிரந்தர பணியாளர்களுக்கும் தலா 6 கிராம் தங்க நாணயமும், 1,573 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தலா 3 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட இருக்கிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த மாதம் முதல் 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக இருந்தது. அது தொழிற்சங்க தலைவர்களின் கோரிக்கையை அடுத்து 15 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதன் மூலம் 1,573 ஒப்பந்த தொழிலாளர்களும் மாதம் ரூ. 975 முதல் 1,275 வரை கூடுதல் ஊதியம் பெறுவார்கள். இதன் மூலம் இந்த நிறுவனத்துக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் கூடுதல் செலவாகும். 01.09.10 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் இவர்களுக்கு அமல்படுத்தப்படும்.
இந்த அரசு தொழிலாளர்களின் நலனில் அக்கறை உள்ள அரசு. எனவே தொழிலாளர்களுக்கு ஆதரவான இந்த அரசுக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதை தொடர்ந்து ஸ்டாலின் தொழிலாளர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்.