குடிநீர் கிணற்றில் விஷம்-2 ஆயிரம் பேர் உயிர் தப்பினர்
கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் யாரோ விஷம் கலந்து விட்டனர். ஆனால் இது முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2000 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயம் அருகில் ச.கணபதிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள நடுநிலை பள்ளியில் இருக்கும் கிணறு தான் கிராம மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகிறது. இந்த நீர் தொட்டியில் ஏற்றப்பட்டு மக்களுக்கு பைப் மூலம சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் பஞ்சாயத்து ஊழியர் வேலுமணி என்பவர் கிணற்றில் இருந்து நீரை மோட்டார் மூலம் தொட்டியில் ஏற்றினார். பின்னர் அது மக்களுக்காக திறந்து விடப்பட்டது.
இதையடுத்து மக்கள் தண்ணீர் பிடிக்க கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது குடிநீர் எதோ ஒரு மோசமான வாடை வீசுவதை பெண்கள் கண்டுபிடித்தனர். இதேபோல் கிணற்றுக்குள்ளும் வாடை வீசியது. மேலும் கிணற்றின் ஒரு பக்கத்தில் விஷம் ஊற்றியதற்கான அடையாளம் தெரிந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கிணற்றில் விஷத்தை ஊற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஊர்மக்கள் சிலர் விஷம் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே தண்ணீர் பிடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தண்டோரா மூலம் நீரில் விஷம் கலந்திருக்கும் செய்தி கிராமம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. சிலர் இந்த தண்ணீரை பயன்படுத்தி செய்த சமையலும் குப்பையில் கொட்டப்பட்டது.
ஆர்டிஓ மகேஸ்வரன் கிணற்றில் உள்ள விஷ நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.
தண்ணீரில் விஷம் பரவியிருப்பது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுமார் 2 ஆயிரம் மக்கள் உயிர்தப்பினர்.