பெயரை மாற்றும் தீவிரவாத இயக்கங்களை முடக்க பாக். புது சட்டம்
இஸ்லாமாபாத்: தடைவிதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் வேறு பெயரில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசு புதிய சட்டதிருத்தம் மேற்கொள்ள இருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் கடந்த 2001ல் இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து இந்திய அரசு வற்புறுத்த வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானில் தடை விதித்தது.
ஆனால், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சையத் அமைப்பின் பெயரை மட்டும் ஜமாத் உத் தவா என மாற்றிவிட்டு வழக்கம் போல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின் ஜமாத் உத் தவா, லஷ்கருடன் தொடர்புடைய அமைப்பு என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ஜமாத் உத் தவா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பல முறை தெரிவித்தது. ஆனால் ஒரு முறை கூட அதை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில் இது போன்ற பெயரை மாற்றி கொண்ட தொடர்ந்து தொல்லை தரும் தீவிரவாத இயக்கங்களை தடுக்க 1997ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை மாற்றி கொண்டு புதிய அமைப்பை துவக்க முடியாது. அப்படி துவக்கினால் அந்த அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே கருதப்படும். இது குறித்து அரசு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட இருக்கிறது என்றார்.