ஐஐஎம் அகமதாபாத்தில் சீன மொழி கற்கும் இந்திய மாணவர்கள்
அகமதாபாத்: எல்லைப் பகுதியில் இந்தியாவும், சீனாவும் முறைத்துக் கொண்டு நிற்கும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள இந்திய நிர்வாகவியல் கழகத்தில் (ஐஐஎம்) சீன மொழியைக் கற்பதில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 60 மாணாக்கர்கள் சீன மொழியை கற்று வருகின்றனராம்.
இவர்கள் அனைவரும் இறுதியாண்டு மாணவர்கள். ஐஐஎம்மின் முதுநிலை கல்வித் திட்டத்தின் சார்பில் சீன மொழியை இவர்கள் கற்று வருகின்றனர். சீனாவில் தற்போது பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருவதால் அங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருவதால் இவர்கள் தங்களது வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு சீன மொழியை கற்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக சீனாவின் ஜின்ஜியாங் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு ஆசிரியர் வரவழைக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு பிசினஸ் சீன மொழியைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
சீன மொழி தெரிந்திருந்தால் ஐஐஎம் டிகிரி வைத்திருப்பவர்களுக்கு சீனாவில் நல்ல டிமாண்ட் உள்ளதாம். இதனால்தான் சீன மொழியைக் கற்க ஐஐஎம் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து ரோஹன் சூரி என்ற மாணவர் கூறுகையில், அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சீனா மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கப் போகிறது. எனவே இந்தியர்களுக்கும் அங்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள சீன மொழி தெரிந்திருப்பது அவசியமாகும்.
மேலும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் அதிகரித்து வருகின்றன, வலுவடைந்து வருகின்றன. இதுபோன்ற சமயங்களில் அடிப்படை சீன மொழியறிவு இருந்தால்தான் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும்.
சீன கலாச்சாரம், மொழிப் புலமை, பேச்சுவழக்கு உள்ளிட்டவற்றை அறிய சீன மொழியை அறிய வேண்டியது அவசியமாகும் என்றார்.
மொழிக்கு ஏது எல்லை..?