பொங்கி வரும் வெள்ளம்- விஜயவாடா அணை உடையும் அபாயம்
விஜயவாடா: ஆந்திராவை அழிச்சாட்டியம் செய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தால், விஜயவாடா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவை பெரும் மழை பெய்து வெள்ளக்காடாக்கி விட்டது. தற்போது மழை நின்று விட்ட போதிலும், வெள்ளக்காடாக காணப்படுகிறது இரு மாநிலங்களின் பல பகுதிகள்.
அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதால் அதிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள பெரும் நீரால் நிலைமை மோசமாகியுள்ளது.
ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர், பிரகாசம் ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அனைத்து அணைகளிலிருந்தும் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலத்தில் இருந்து திறந்து விடப்பட்ட 11 லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் நாகர்ஜுனா சாகருக்கு வருகிறது. அங்கிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று மதியம் அளவில் பிரகாசம் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரகாசம் அணை நிரம்பியுள்ள நிலையில் ஒரே நேரத்தில் இவ்வளவு தண்ணீர் வருவதால் அதை தாங்கும் அளவுக்கு பிரகாசம் அணை இல்லை. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். எனவே தண்ணீரை தாங்கி கொள்ள முடியாமல் அணை உடையும் ஆபத்து உள்ளது.
பிரகாசம் அணை உடைந்தால் விஜயவாடா நகருக்குத்தான் பேராபத்து ஏற்படும். கிட்டத்தட்ட நகரமே அழிந்து போகும் அளவுக்கு அபாயம் உள்ளது. இதையடுத்து அங்கிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேரை அதிகாரிகள் விரைவாக வெளியேற்றியுள்ளனர்.
மேலும், நகரில் யாரும் இருக்க வேண்டாம். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விட வேண்டும் என முதல்வர் ரோசய்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வேளை அணை உடைந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளும் திட்டமிடப்பட்டு ஆயத்தமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications