ஜெயலலிதாவிடம் பேசி பயனில்லை-பாமக
சென்னை: திண்டிவனத்தில் நடந்த கொலைக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தும் வேண்டும் என்றே வழக்கில் அவரை வழக்கில் சேர்க்க சி.வி.சண்முகம் முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினோம். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு கோரி தமிழக லட்சிய குடும்பம் அமைப்பின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஜி.கே.மணி மற்றும் அக் கட்சியின் எம்எல்ஏக்கள் தமிழரசு, எதிரொலி மணியன், ஆகியோர் போராட்டம் நடத்துவோரிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற அந்த அமைப்பினர் மறுத்து விட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய மணியிடம், அதிமுக கூட்டணியை விட்டு பாமக வெளியேறியது ஏன்? என்று நிருபர்கள் கேட்டதற்கு,
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
திண்டிவனத்தில் நடந்த கொலைக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தும் வேண்டும் என்றே வழக்கில் அனைவரையும் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினோம். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை. தொடர்ந்து சி.வி.சண்முகம் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார். இதுவே கூட்டணி முறிவுக்கு காரணம் என்றார்.
மீண்டும் திமுக கூட்டணியில் சேருவீர்களா? என்று கேட்டதற்கு, இது கூட்டணி பற்றி பேசும் நேரம் அல்ல. அதற்கான அவசியமும் இப்போது இல்லை. எங்களைப் பொருத்தவரை கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணியை முன் எடுத்துச் செல்வோம். தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம் என்றார்.