மகனை முதல்வராக்க பால் தாக்கரே திட்டம்!

உத்தவ் தாக்கரே தற்போது சிவசேனாவின் செயல் தலைவராக இருக்கிறார். இவருக்கும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான சண்டை மகாராஷ்டிர மாநிலம் நன்கறிந்த ஒன்றாகும்.
தற்போது மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 13ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை பாஜகவுடன் இணைந்து சிவசேனா சந்திக்கிறது. தலித் கட்சிகள் இடதுசாரிகளுடன் இணைந்து களம் கண்டுள்ளன.
தேர்தலில் சிவசேனாவுக்கும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கும் இடையே கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள கடும் போட்டியே நடக்கிறது.
தற்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கோப அலை வீசுகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சிவசேனா - பாஜக கூட்டணி தீவிரமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கடும் கோபத்திலும் உள்ளனர்.
ஆனால் இந்த அதிருப்தி வாக்குகளை அப்படியே அள்ளும் அளவுக்கு சிவசேனா, பாஜகவிடம் பலம் இல்லை, திட்டம் இல்லை.
மகாராஷ்டிராவில் பாஜக சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் உள்ளது. அதிருப்தி வாக்குகளில் பாதியாவது தங்களுக்குத் திரும்பும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் அந்தக் கட்சி உள்ளது.
மறுபக்கம், சிவசேனா முன்பு போல உறுதியாக இல்லை. ராஜ் தாக்கரேவால் கட்சி உடைந்து போய் விட்டது. ராஜ் தாக்கரேவை விட கூடுதலான வாக்குகளையும், சீட்களையும் வாங்குவதே லட்சியம் என்பது போல செயல்பட்டு வருகிறது சிவசேனா. அதாவது தனது செல்வாக்கு போய் விட்டது என்றாகி விடக் கூடாது என்பதில்தான் அது முதல் கவனத்தை செலுத்துகிறது.
இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக - சிவசேனாவுக்கு வாக்களிக்க விரும்பாத மக்கள், ராஜ் தாக்கரே கட்சிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் பிரித்து வாக்களிக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும் தெரியாத பேயுடன் வாழ்வதைக் காட்டிலும் தெரிந்த பேயே பெட்டர் என்ற பழமொழிக்கேற்ப காங்கிரஸ் - தேசியவாத காங் கூட்டணிக்கே வாக்களிக்கவும் அதிருப்தியில் உள்ள வாக்காளர்களில் பலர் கருதுகிறார்களாம்.
தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக உள்ள வாக்குகளை தனக்கு ஆதரவாக திருப்பும் திட்டத்துடன் சிவசேனா கூட்டணி இல்லாமல் இருந்தாலும் கூட நிச்சயம் தனக்கு ஆதரவாக வாக்குகளை திருப்ப அது முயலும், அப்படி செய்யும்போது நிச்சயம் அது காங்கிரஸ் கூட்டணிக்கு பலத்த அடியாக அமையும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே...
இந்த நிலையில் சிவசேனா கூட்டணி ஒரு வேளை வெற்றி பெற்றால் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. சிவசேனா தனது தரப்பு முதல்வர் பதவி வேட்பாளராக உத்தவ் தாக்கரேவை தேர்வு செய்து வைத்துள்ளதாம். பால் தாக்கரேவின் விருப்பமாம் அது.
கட்சி மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் தனது ஸ்டைலில்தான் ஆட்சி நடத்துவார் உத்தவ் என்கிறார்கள் சிவசேனா கட்சியினர். பால் தாக்கரேவை பெருமளவில் அவர் நம்பியிருக்க மாட்டார் எனவும், சுதந்திரமாக செயல்படுவார் எனவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அதேசமயம், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் முதல்வர் வேட்பாளரை இப்போதைக்கு தெரிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
இந்த நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவம், மும்பையிலேயே பெரிய பிரச்சினையாக கருதப்படவில்லையாம். அதை தேர்தல் பிரச்சினையாகவும் மக்கள் பார்க்கவில்லையாம். தீவிரவாதத் தாக்குதல் தேசியப் பிரச்சினை என்று கருதும் மும்பை மக்கள் இதை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது என்றும் கருதுகிறார்களாம்.
தற்போதைய நிலையில் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரிதாக எடுத்து வைக்கப்படும் முக்கிய விஷயங்களாக - விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, நகர்ப்புற நிர்வாகம், குடிசைப் பகுதி முன்னேற்றம், ஊழல், அரசின் மீதான கடும் அதிருப்தி ஆகியவையே.
முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் சிவசேனா கூட்டணியும், அதிருப்தி அலையைத் தாண்டி எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கூட்டணியும் மும்முரமாக உள்ளதால் மகாராஷ்டிர தேர்தல் களம் சூடாகவே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications