கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புகிறார் ஜெ.!
சென்னை: மே மாதம் 28ம் தேதி கொடநாடு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது நீண்ட ஓய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வியோடு கொடநாடு மலையேறினார் ஜெயலலிதா. அங்கேயே தொடர்ந்து தங்கி வந்த அவர் அங்கிருந்தபடியே அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
ஜெயலலிதா எப்போது வருவார் என்று அவரைத் தவிர வேறு யாருக்குமே புரியாத புதிராக இருந்து வந்தது. வருகிற 17ம் தேதி அதிமுகவின் 38வது ஆண்டு விழா வருகிறது. இதனால் நிச்சயம் அதற்குள் ஜெயலலிதா திரும்பி விடுவார் என்று நம்பப்பட்டது.
அதன்படியே ஜெயலலிதாவும் விரைவில் ஊர் திரும்புகிறார். வருகிற 12ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டு 45 தொழிலாளர்களுக்கு நிதி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் சென்னை திரும்புவது உறுதியாகியுள்ளது.