அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதால் அதிர்ச்சி இல்லை - திருமா.
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே இதனால் அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
இலங்கை முகாம்களில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரியும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய விடுதலைப் பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.
அப்போது திருமாவளவன் பேசுகையில்,
இலங்கையில் போர் முடிந்த பிறகும் வதை முகாமிற்கு செல்ல பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த செயலை ஹிட்லர் கூட செய்யவில்லை. ஆனால் ராஜபக்சே செய்கிறார். முகாம்களில் குடிக்க தண்ணீர் இல்லை. சுகாதாரம் இல்லை. பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
வதை முகாம்களில் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் சார்பில் பிரதமரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம்.
வருகின்ற 12-ந் தேதி மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 13-ந் தேதி மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியும் நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை.
ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதர் பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இலங்கை தூதரகம் இருக்க கூடாது.
செங்கல்பட்டு முகாமில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை முதல் அவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் போராட்டத்தை தொடர உள்ளனர்.
அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியிருப்பது எதிர்பார்த்த ஒன்று தான். தேர்தலுக்கு முன்பே விடுதலைச் சிறுத்தைகள் சொல்லியது தான். இதில் அதிர்ச்சி அடைவதற்கும், ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை என்றார் திருமாவளவன்.