தீபாவளி கூட்டம்-சமாளிக்க மெகா ரயில்: 2000 பேர் பயணிக்கலாம்!
தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வந்து விட்டாலே, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் விழி பிதுங்கிப் போய் விடுவார்கள்.
பண்டிகை காலத்தில்தான் சொந்த ஊர்களுக்குப் போய் உற்றார், உறவினர்களைச் சந்தித்து உற்சாகமடைந்து திரும்புவது இவர்களின் வழக்கம். ஆனால் சமீப ஆண்டுகளாக ஊருக்குப் போக நினைத்தால் அதற்குள் உயிரே போய் திரும்பி வருவது போன்ற நிலைமை ஏற்பட்டு விடுகிறது. காரணம், ரயில்கள் கிடைக்காததே.
இத்தனைக்கும் திருச்சியைத் தாண்டி உள்ள மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன. ஆனால் எத்தனை விட்டாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
சென்னையில் செட்டிலாகியுள்ள தென் மாவட்டவாசிகளில் பெரும்பாலானோர் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் தினமும் விட்டபோதிலும் பயணிகள் கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 16ம் தேதி பகல் நேரத்தில் ஒரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது. இது ஒரு மெகா ரயில் ஆகும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த ரயில் (0603) விடப்படுகிறது.
16-ந்தேதி காலை 9.30 மணிக்கு எழும்பூரில் இருந்து இந்த ரயில் புறப்படும். அன்று இரவு 10.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து (0604) சென்னைக்கு 18-ந்தேதி காலை 9.35 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 10.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய நிலையங்களில் இது நின்று செல்லும்.
இந்த ரெயில் 21 பெட்டிகளுடன் செல்கிறது. படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் வசதி உள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. உட்கார்ந்து செல்லும் சீட்டுகள் கொண்ட 12 பெட்டிகளும், ஒரு ஏ.சி. சேர் கார் பெட்டியும், 6 முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளும், இணைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 2000 பயணிகள் செல்ல வசதியாக இந்த ரயில் விடப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் அன் ரிசர்வ்ட் எனப்படும் முன்பதிவு செய்யாத பெட்டியில் நெல்லைக்குப் பயணிக்க கட்டணம் ரூ. 140. உட்கார்ந்து செல்வற்கு முன்பதிவு கட்டணம் ரூ.15 ஆகும்.
இதேபோல மேலும் ஒரு சில ரயில்களை விட்டால் ஆம்னி பஸ் என்ற பெயரில் 'ஆக்டோபஸ்' போல மக்களை வளைத்து வளைத்துக் கொள்ளையடிக்கும் கும்பல்களிடமிருந்து அப்பாவிகள் தப்பி சந்தோஷமாக தீபாவளியைக் கொண்ட உதவியாக இருக்கும்.