விபச்சார பெண்களுக்கு புர்கா அணிவிக்க தமுமுக கடும் எதிர்ப்பு!
திருநெல்வேலி: விபச்சார வழக்கில் கைதாகும் பெண்களுக்கு முஸ்லீம் பெண்களை போல் புர்கா அணிய செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜா கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகிற ஆடை புர்கா. அந்த கண்ணியம் மிக்க ஆடையான புர்காவை, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள் அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன.
விபச்சார வழக்கில் கைதாகும் பெண்களுக்கு புர்காவை அணிவித்து, அழைத்து வருவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதனால் புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் செயலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனரிடம், தமுமுக மாநிலச் செயலாளர் ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
எனவே, முஸ்லீம்க்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று அறிக்கையில் ஹாஜா கனி கூறியுள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை:
அதேபோல இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் வட சென்னை மாவட்டச் செயலாளர் யூசுப் கான், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஹாஜா கலிமுல்லா, பெண்கள் பிரிவு பொறுப்பாளர்கள் மசூதா ஆலிமா, நஜிமா பேகம் உள்ளிட்ட பலர் இன்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், சென்னையில் விபச்சாரம் போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் பெண்கள் இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் பர்தா உடை அணிந்து வருகிறார்கள். இது முஸ்லிம்கள் மனதை புண்படுத்தி உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இது போல் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்தா உடையை குற்ற செயல்களில் ஈடுபடுவோர் அணிவதை தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications