கடலுக்கடியில் மாலத்தீவு அமைச்சரவை கூட்டம்!
மாலே: உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தில் வரும் 17ம் தேதி மாலத்தீவு அமைச்சர்களின் கூட்டம் கடலுக்கடியில் நடக்கவிருக்கிறது. அமைச்சர்கள் அனைவருக்கும் ராணுவ தளத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மாலத்தீவு அதிபரின் ஆலோசகர் ஒருவர் கூறுகையில்,
அதிபர் முகமது நசீத்தும், அமைச்சர்களும் வரும் 17ம் தேதி கடலுக்கடியில் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் உலக நாடுகள் கார்பன் மூலக்கூறு வெளியிடும் அளவை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருக்கின்றனர்.
தற்போது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு 350 பிபிஎம் அளவு உள்ளது. இது கொஞ்சம் அதிகரித்தாலும், சீரமைக்க முடியாத மோசமான விளைவுகளை ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடலுக்கடியில் அமைச்சரவை கூட்டம் நடத்துவது சற்று காமெடியாக தெரிந்தாலும், உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.
உலகின் தாழ்வான பகுதிகளில் மாலத்தீவு ஒன்று என்பதால் உலக வெப்பமயமாதல் காரணமாக உருகும் பனிமலைகளால் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவின் 80 சதவீத பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து 1 மீ உயரத்தில் தான் இருக்கிறது. கடல் நீர் மட்டம் அதிகரித்தால் மொத்த ஊரும் கடலுக்குள் போய்விடும். பின்னர் மக்கள் அனைவரும் புதிய நாடு தேடி போகும் சூழல் உருவாகும்.
இந்த கூ்டடத்தில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கு ராணுவ தளத்தில் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதிபர் நதீம் ஏற்கனவே டைவ்விங்கில் வல்லவர் என்பதால் அவருக்கு பயிற்சி தேவையில்லை. ஒவ்வொரு அமைச்சருடனும் ஒரு பயிற்சியாளரும், ராணுவ அதிகாரி இருப்பார்கள்.
மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஏழை, பணக்கார, வளர்ந்த, வளரும் நாடுகள் என்ற பாகுபாடில்லாமல் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என ஒரு ஆவணத்தில் அதிபரும், அமைச்சர்களும் கையெழுத்திட இருக்கின்றனர். இதற்காக அவர்கள் நீரில் பாதிக்கப்படாத அட்டைகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்படும்.
அதன் பின்னர் அதிபர் நசீத், நீருக்கடியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துகிறார்.