மக்கள் பிரச்சனையை மறந்து விட்டது காங்- கம்யூ. புகார்
சென்னை: மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதிலும், முன்பேர வர்த்தக முறையை அனுமதிப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறது என இடதுசாரிகள் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு எதிர்ப்பு மற்றும் உணவு உரிமைக்கான சிறப்பு மாநாடு நேற்று சென்னையில் நடந்தது.
அதில் காங்கிரஸ் அரசை கடுமையாக குறைகூறிய இடதுசாரிகள் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். அவை,
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்டுத்தவும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பெரும் தோல்வி கண்டுள்ளது.
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதிலும், முன்பேர வர்த்தக முறையை அனுமதிப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறது.
ரேஷன் கடைகளை மூட பார்க்கிறது...
விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் கொடுப்பதில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. மேலும் ரேஷன் கடைகளை மெல்ல, மெல்ல மூடுவதில் அக்கறை காட்டுகிறது.
இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியப் பொருட்களின் முன்பேர வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். உணவுப் பதுக்கலை ஒழிக்க வேண்டும். கள்ள வியாபாரிகளுக்கும், வர்த்தக சூதாடிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நவம்பர் 17ல் போராட்டம்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நவம்பர் 17ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications