கரூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் 873 பேர் சஸ்பெண்ட்
கரூர்: கரூர் அருகே உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 873 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் - சேலம் பைபாஸ் மெயின் ரோட்டில் உள்ளது எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஹாஸ்டல்கள் கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக அமைந்துள்ளன.
ஹாஸ்டலில் தங்கியுள்ள ஒரு சில மாணவர்கள் இரவு 11 மணிக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக கல்லூரி வாட்ச்மேன் புகார் கூறியுள்ளார்.
இதனால், மாணவர்கள் வைத்திருந்த செல் போனை கல்லூரி நிர்வாகம் சார்பில் பறிக்க முயன்றனர். அதனால் மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்த 873 மாணவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து , அறையை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது, எங்களுக்கு செலவுக்கு பணம் இல்லாத நேரத்திலும், கல்லூரியில் அவரச தேவைக்கும் பெற்றோர்களிடம் செல் போன் மூலமே பேசியாக வேண்டிய நிலை உள்ளது.
ஹாஸ்டலில் தங்கியுள்ள எங்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என சிலரிடம் பேச உள்ள ஒரு வாய்ப்பு செல் போன் மட்டுமே.
கல்லூரியில் சென் போன் கூடாது என்பதை ஏற்கின்றோம். ஆனால், ஹாஸ்டலில் செல் போன் பேசக் கூடாது என கூறுவதை எப்படி ஏற்க முடியும். கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலில் மாணவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரவில்லை. இதை நாங்கள் பல முறை சுட்டிக் காட்டியதால் தான் இது போன்ற செயல்களில் கல்லூரி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.