உள்ளாட்சி இடைத் தேர்தல்: ராஜபாளையத்தில் திமுக அணி வெற்றி- திருப்பூரில் அதிமுக வெற்றி
இங்கு அதிமுக அணிக்கு 13 இடங்கள் கிடைத்ததது. சுயேச்சைகள் 3 வார்டுகளில் வென்றனர்.
ராஜபாளையம் நகராட்சிக்கு நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
இதில், மொத்தம் உள்ள 42 வார்டுகளில் 19 வார்டுகளை காங்கிரஸும், 7 வார்டுகளை திமுகவும் வென்றன. இதன் மூலம் 26 வார்டுகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு இங்கு 13 இடங்களில் வெற்றி கிடைத்தது. 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
திருப்பூரில் அதிமுக வெற்றி...
புதிதாக மாநகராட்சி ஆக்கப்பட்டுள்ள திருப்பூரில், 35வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.
மம்சாபுரம் பேரூராட்சியின் 1வது வார்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் அழகுமுத்து வென்றார்.
இவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவரும் ஒரு சுயேச்சைதான். இவரை விட ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்று அழகுமுத்து வெற்றி பெற்றுள்ளார்.
சிவகாசியில் அதிமுக வெற்றி...
சிவகாசி நகராட்சியின் 21வது வார்டில், அதிமுக வேட்பாளர் திருமுருகன் திமுக வேட்பாளரை விட 17 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருத்தங்கல் நகராட்சியின் 5வது வார்டில் திமுக வெற்றி பெற்றது.
அவிநாசியில் நடந்த பேரூராட்சி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
கள்ளிக்குடி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்பா ரெட்டி முன்னணியில் உள்ளார்.
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் அதிமுக வெற்றி...
அரக்கோணம் நகராட்சியின் 30வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றார்.
காட்பாடி காந்தி நகர் பேரூராட்சியின் 5வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் சீனிவாசன் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சட்டக் கல்லூரி மாணவி அமுதா வெற்றி பெற்றார்.
ஆலந்தூரில் திமுக வெற்றி...
ஆலந்தூர் நகராட்சியின் 18வது வார்டில் திமுக வேட்பாளர் பாஸ்கரன் வென்றார்.
பூந்தமல்லி நகராட்சியின் 11வது வார்டில் திமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி பெற்றார். அதேபோல 17வது வார்டில் திமுக வேட்பாளர் தாஜுதீன் வெற்றி பெற்றார்.
மாங்காடு பேரூராட்சியின் 13வது வார்டில் திமுக வெற்றி பெற்றது.
சித்தாலப்பாக்கம் 2வது வார்டில் திமுக வேட்பாளர் பாண்டியன் வென்றார். பீர்க்கங்கரணை பேரூராட்சியின் 8வது வார்டில் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார் வெற்றி பெற்றார்.
அண்ணாமலை நகரில் தேமுதிக வெற்றி...
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார்.
லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் த.மு.மு.க. வேட்பாளர் யாசர் அராபத் வெற்றி பெற்றார்.
விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் காசிநாதன் வெற்றி பெற்றார்.
செய்யாறு தாலுக்கா, திருவத்திபுரம் நகராட்சியில் 4-வது வார்டுக்கு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்றார்.
ஆரணி, மருசூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எல்லப்பன் வென்றார்.
வேட்டவலம் பேரூராட்சி 9-வது வார்டுக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார்.
தென்காசியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி...
தென்காசி 16வது வார்டு உறுப்பினராக மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த முகமது அலி வெற்றி பெற்றார். மானூர் யூனியன் 6வது வார்டு உறுப்பினராக தி்முகவை சேர்ந்த மாரியம்மாள் வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில் யூனியன் செந்தட்டியாபுரம் பஞ் தலைவராக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கருப்பழகு வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தன்குளம் பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை வெற்றி பெற்றார். கழுகுமலை பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினராக காங் கட்சியை சேர்ந்த இசக்கிமுத்து வெற்றி பெற்றார்.
அய்யனடைப்பு 1வது வார்டு உறுப்பினராக முத்துபாண்டி, கடையனோடை 1வது வார்டு உறுப்பினராக ஹரீஸ் கவி, மந்தித்தோப்பு 1வது வார்டு உறுப்பினராக முத்துராஜ், அயன்ராஜபட்டி 1வது வார்டு (இரட்டை உறுப்பினர்) நாராயணசாமி, மனோகரன், 2வது வார்டில் தர்மராஜ், ஸ்ரீபிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற சுயேட்சைகளை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகளிடையே முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.