இன்ஸ்பெக்டருக்கு உருட்டுக் கட்டை அடி: ஒருவர் கைது
கடலூர்: கடலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாரை உருட்டு கட்டையால் தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 17 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஏட்டுகள் ராஜ்குமார், சின்னசாமி, சுகுமார் ஆகியோர் இரவு நேரத்தில் பண்ருட்டி அடுத்த சின்னபகண்டை சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியே புதுச்சேரியில் இருந்து இரண்டு ஹீரோ ஹோண்டா பைக்குகளில் வந்த பெரிய பகண்டை மணிகண்டன், சின்னபகண்டை கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மூவரும் தங்களது ஊருக்கு சென்று சுமார் 15 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்தது.
கையில் உருட்டு கட்டையுடன் வந்த அந்த கும்பல் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட தனிப்படை போலீஸாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஏட்டு ராஜ்குமார் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரிய பகண்டை மணிகண்டன், கிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் அடையாளம் தெரிந்த 15 பேர்கள் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
அவர்களில் கிருஷ்ணன் (32) என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 17 பேரை போலீஸார் தேடிருகின்றனர்.












Click it and Unblock the Notifications