ஆபாசமாகப் பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை - முதல்வருக்கு 2 நாள் கெடு
சென்னை: பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய நடிகர்கள் மீது இன்னும் 2 நாட்களுக்குள் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு பத்திரிக்கையாளர் அமைப்புகள் கெடு விதித்துள்ளன.
இன்று மாலை சென்னை பிரஸ் கிளப்பில் அனைத்து பத்திரிக்கையாளர் அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கலந்து கொண்டார். அவரை பத்திரிக்கையாளர்கள் கை குலுக்கியும், கைதட்டியும், வாழ்த்து தெரிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
அதன் பின்னர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முக்கியமான 3 முடிவுகள் எடுக்கப்பட்டன.
சூர்யா, சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயக்குமார் மீது நடவடிக்கை...
- நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பப் பெண்களையும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், விஜயக்குமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையை இன்னும் 2 நாட்களுக்குள் எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட வேண்டும்.
ரஜினி உள்ளிட்டோர் மீது வழக்கு ...
- நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்துப் பேசிய நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜயக்குமார், சூர்யா, விவேக், சேரன் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர் அமைப்புகள் சார்பில் வழக்கு தொடருவது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அமைப்புகள் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள் வரை அனைத்து அமைப்புகளும் தத்தமது மாவட்டங்களில் வழக்குகள் தொடருவது.
கூட்டு நடவடிக்கைக் குழு...
- பல்வேறு பெயர்களில் பிரிந்து கிடக்கும் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action committee) அமைப்பது. இந்த நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் வருகிற திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவது.
அப்போது, நடிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக தினமலர் செய்தி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேசமயம், பத்திரிக்கையாளர்கள் தரப்பில் ஆபாசமாக பேசிய நடிகர்கள், நடிகை மீது உரிய வீடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் உங்களை வந்து சந்திக்க அனுமதித்தது நியாயமா என்று முதல்வரிடம் கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
- சினிமா தொடர்பாக இனிமேல் உள்ளது உள்ளபடியே செய்திகளைத் தர வேண்டும். யாரையும் தேவையில்லாமல் புகழ்ந்து செய்திகள் தரக் கூடாது. உண்மையை மட்டுமே எழுதுவோம், உரிய ஆதாரங்களுடன் மட்டுமே எழுதுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications