தீபாவளி - பீகார் கொள்ளையர்கள் நெல்லையில் ஊடுறுவல்
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஓட்டி பீகார் கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர்களை விழிப்புடன் இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரபல மொபைல் ஷோரூம் உள்ளி்ட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பீகாரை சேர்ந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். நெல்லையில் கடந்த ஆண்டு மட்டும் லட்சக்கனக்கான மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது.
இதேபோல் இந்த ஆண்டும் பெரிய கடைகளில் கொள்ளையடிக்க பீகார் கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நெல்லை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நகரிலுள்ள நகை, ஜவுளி, செல்போன் கடை உரிமையாளர்களுக்கும் இது தொடர்பாக அவர்கள் தகவல் தெரிவித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.