பாக். ராணுவ தலைமையகத்தில் தாக்குதல்: பலர் பலி- படையினர் சுட்டு 4 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவத் தலைமையகம் மீது இன்று நான்கு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் இறங்கினர். அவர்களுடன் கடும் சண்டையிட்ட ராணுவத்தினர், நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் உள்ளது. அங்கு இன்று காலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். சரமாரியாக தாக்குதலில் இறங்கினர். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது ராணுவத் தலைமயைகத்திற்குள் தீவிரவாதிகள் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலி்ல் ராணுவத் தரப்பில் பலர் பலியானதாக கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனராம். ஆனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இன்று தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் கையெறி குண்டுகளை வீசினான். மற்றவர்கள் சரமாரியாக படையினரை நோக்கி சுட்டபடி முன்னேறினர்.
தாக்குதல் நடந்தபோது சில உயர் அதிகாரிகள் உள்ளேயிருந்து வெளியேற முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.