மருத்துவமனையில் மின்வெட்டு - நோயாளி பரிதாப சாவு
டெல்லி: டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயது மூதாட்டி, மின்வெட்டால் உயிரிழந்துள்ளார்.
அவரது பெயர் சாரதா கெளர். கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளானார் அந்தப் பெண். நெடு நேரமாக மின்சாரம் வராததால் துடிதுடித்த அந்த வயதான பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சாரதா கெளருக்கு நாளை 75வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் இல்லை. இதனால் ஐசியூவில் இருந்த சாரதா பெரும் உயிர்ப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.
ஆனால் மின்வெட்டால் சாரதா கெளர் உயிரிழக்கவில்லை என்றும் ஏற்கனவே அவர் சீரியஸாகத்தான் இருந்தார் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
தற்போது அந்த மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடந்து வருகிறதாம். இதனால் அவ்வப்போது மின்சாரத்தை துண்டித்து விட்டு வேலை பார்க்கின்றனர். இதனால் நோயாளிகள் பெரும் பாதிப்படைவதாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.