'பாரதிராஜா' பேச்சு- கோர்ட்டில் வைகோ ஆஜர்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னையில் கடந்த மே 30ம் தேதி அன்று புரசைவாக்கத்தில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மீது கருணாநிதி சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வைகோவுக்கு சம்மன் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர் இன்று நீதிமன்றம் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பயனில்லாத இலங்கை பயணம்...
இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களை சந்தித்த வைகோ கூறுகையில்,
பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசியதற்காக 2 வழக்குகள் போட்டுள்ளனர். ஒன்று திமுக தொடர்ந்தது. மற்றொன்று தமிழக அரசு தொடர்ந்தது. ஒரே பிரச்சினைக்காக 2 வழக்குகள் போடப்பட்டிருப்பது விசித்திரமானது.
மதிமுக எந்த பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருக்கிறது. ஈழத்தில் போர் நடப்பதற்கு இந்திய அரசு தான் காரணம். ஐநா கேட்டு கொண்ட போதிலும் போர் நிறுத்தப்படவில்லை.
ரத்தம் தோய்ந்த கரங்களுடன் ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று தான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு. இதனால் எந்த பயனும் இருக்காது என்றார்.