அழகிரியை கண்டித்தார் பிரதமரின் செயலாளர்-சாமி
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் சாமி பேசுகையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நடவடிக்கைகள் தவறாக அமைந்துள்ளன என்று ஏற்கனவே புகார்கள் உள்ளன.
இந்த நிலையில், பிரதமரின் செயலாளர் நாயர், முக.அழகிரயை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதில் தருவதில்லை, அமைச்சக அலுவலகத்தில் இருப்பதில்லை என்பது உள்ளிட்ட 13 புகார்களைக் கூறி அவர், அழகிரியைக் கண்டித்துள்ளார். இதனால் தமிழகத்தின் பெயரே கெட்டுப் போய் விட்டது.
அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் அவருக்கு எதிரான புகார்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
சேது சமுத்திர திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதி மன்றம் செல்ல உள்ளேன். இத்திட்டத்திற்கு ஆகியிருக்கும் செலவுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோரின் சொத்துக்களிலிருந்து திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த வழக்கை தொடர உள்ளேன்.
ஸ்டாலினுக்கு என்ன நோய்...?
துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். அவருக்கு என்ன நோய் என்று அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
முல்லை பெரியாறு விஷயத்தில் முதல்வர் கருணாநிதி, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலைப் புலிகளை ஒழித்தது வரவேற்கத்தக்கது. அதே சமயம் தமிழர்களுக்கு மாகாண அரசு அமைத்து உரிமைகளை வழங்கா விட்டால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஓட்டு போட்டா ரசீது தரணும்...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களின் முறைகேடு தொடர்பாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளேன். ஏடிஎம் மிஷின்களில் ரசீது வருவதை போல வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் ஓட்டு போட்டதும் ரசீது வழங்க கோரியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது நல்ல ஜோக் ஆகும்.
செய்தி ஆசிரியர் கைதுக்குக் கண்டனம்...
நடிகைகள் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி தினமலர் செய்தி ஆசிரியர் பெண்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
செய்தி வெளியிட்டதற்கு மறுப்பு தெரிவித்தும் கூட இம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் நடிகர், நடிகைகள் கோர்ட்டை அணுகியிருக்கலாம், வழக்கு தொடர்ந்திருக்கலாம்.
ராகுலுக்கு நதி நீர் இணைப்பின் அவசியம் குறித்து எதுவும் தெரியாது. இதனால் தான் இந்தத் திட்டத்துக்கு எதிராக பேசியிருக்கிறார் என்றார் சாமி.