நாங்களும் தயார்: கருணாநிதி தயாரா?-ராமதாஸ்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையிலான எதிர்க்கட்சிக் குழு இலங்கை செல்லத் தயார். இதற்கு அனுமதி தர மத்திய அரசு தயாரா, அதற்கு ஆதரவு தெரிவிக்க முதல்வர் கருணாநிதி தயாரா என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுகுறித்து அவக் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் முள்கம்பி வேலிகளுக்குள் அல்லல்படும் தமிழர்களின் உண்மை நிலையை நேரில் சென்று பார்த்து அறிந்து வர நம்முடைய கூட்டணி' கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்பிட ஆவண செய்திட வேண்டும் என்று தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தார்கள்.
இதில் முதல் 3 முக்கிய கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிட்டு, கூட்டணி கட்சி எம்.பி.க்களை கொண்ட அதிகாரப்பூர்வமற்ற குழு இலங்கைக்கு சென்று வர பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
தனது கூட்டணி கட்சி எம்.பி.க்களை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார். அவர்களும் அங்கே சென்று இலங்கை ராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்ற முகாம்களை மட்டும் பார்த்திருக்கிறார்கள். இது இலங்கை தமிழர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் நமக்கெல்லாம் புலப்படுத்தி கொண்டிருக்கின்றன.
முள்வேலி முகாம்கள் எப்படி இருக்கின்றன. அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லல்படுகிறார்கள் என்பதை வெளிநாட்டு தொலைக்காட்சிகளும், வெளிநாட்டு பத்திரிகைகளும் விரிவாக படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கின்றன. எனவே, முள்வேலி முகாம்களுக்குள் தமிழர்கள் எப்படி அல்லல்படுகிறார்கள் என்பதில் புதிதாக அறிந்து கொள்வதற்கு எதுவும் இல்லை.
இந்த நிலையில் அங்கே தனது கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்து முகாம்களின் நிலைமையை அறிந்துவரச் செய்திருப்பதன் மூலம் முள்வேலி முகாம்களையும், இலங்கை அரசின் அரக்கத்தனத்தையும் அங்கீகரித்துவிட்டதற்கு ஒப்பாகிறது.
இலங்கை தமிழர்களுக்கு வேண்டுவதெல்லாம் அனுதாபங்கள் அல்ல; ஆறுதல் மொழிகள் அல்ல; முள்வேலி முகாம்கள் அகற்றப்பட்டு அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் எல்லாம் சுதந்திரமாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பி குடியமர்த்தப்பட வேண்டும். அதன்பிறகு, அவர்களது மறு வாழ்வுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
ராஜா தலைமையில் போக நாங்கள் தயார்..
அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு நீங்களும் போவது தானே என்று முதல்வர் ஆலோசனை கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அக்கறையும், ஆர்வமும் காட்டி வருகிற தேசிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மையாக விளங்குகிறது.
அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அழைத்து செல்ல நாங்கள் தயார். இலங்கை அதிபரை நேரில் சந்தித்து முள்வேலி முகாம்களை உடனே அகற்றுங்கள் என்று வாதிடத் தயார்.
எங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா? இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமா? நமது கூட்டணி கட்சிகளுக்கு உதவியதைப் போல இவர்களுக்கும் உதவுங்கள் என்று பிரதமரிடம் முதல்வர் பரிந்துரை செய்வாரா?.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நமக்குள் மோதல் வேண்டாம். எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று முதல்வர் கூறுவது உண்மையானால், தமிழினத்தின் அவமான சின்னமாக விளங்கும் முள்வேலி முகாம்கள் உடனடியாக உடைத்தெறியப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசு, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போரின் போது, அடிக்கடி கொழும்பு சென்றுவந்த இந்தியத் தூதுவர்கள் உடனடியாக கொழும்புக்கு புறப்பட்டுச் சென்று, அங்கேயே முகாமிட்டு முள்வேலி முகாம்களை அகற்றி 3 லட்சம் தமிழர்களை விடுதலை செய்து திரும்பி வர வேண்டும் என்று முதல்வர் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கை சென்ற குழுவில் எங்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற கோபத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முதல்-அமைச்சரோடு இதில், கரம் கோர்த்து செயல்படவும், அவரோடு ஓங்கிக் குரல் கொடுக்க நாங்கள் தயார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications