உஸ்மான் கைது முக்கிய திருப்பம்-பாக். போலீஸ்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் நடத்திய தாக்குதலின் போது பிடிபட்ட உஸ்மானுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மற்றும் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் மீதான கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளது. இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டது முக்கியவத்தும் வாய்ந்தது என பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்குள் நுழைந்த தாலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர். ராணுவம் பதில தாக்குதல் நடத்தி தலைமையகத்தை மீட்டது.
இந்த சம்பவத்தில் 6 ராணுவ வீரர்கள், 2 கமாண்டோக்கள், 8 தாலிபான்கள், 3 பிணை கைதிகள் உட்பட 19 பேர் பலியானார்கள். பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் மீட்கப்பட்டனர். தீவிரவாதிகள் வைத்திரு்த 18 ஏக 47 துப்பாக்கிகள், 1 ராக்கெட் லாஞ்சர், வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், போலீஸார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தீவிரவாதி ஒருவனையும் கைது செய்துள்ளனர். அவரது பெயர் அகீல் அகமது என்ற உஸ்மான். பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர். தாலிபான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-ஜங்வி என்ற அமைப்பின் முக்கிய தளபதி.
தற்போது அவன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து லாகூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உஸ்மான் கைது செய்யப்பட்டது. வழக்கில் பெரிய திருப்புமுனை. அவனிடம் இருந்து மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவரிடம் விசாரணை துவக்கலாம் என கூறியவுடன் விசாரணையை ஆரம்பித்துவிடுவோம் என்றார்.
மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷராப் மீதான கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றுடன் உஸ்மானுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications