Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

58,000 தமிழர்கள் இன்று முதல் 15 நாட்களுக்குள் வீடு திரும்புவார்கள்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

CM with the team members
சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் நேற்று சென்னை திரும்பினர். பின்னர் அவர்கள் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து 9 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.

பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

குழுவை அனுப்பி இலங்கை நிலவரத்தை நேரில் தெரிந்து கொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நான் செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தமிழர்கள் அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதாக செய்திகள் வந்தன.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். ராஜபக்சே கடிதத்துக்கு இணங்க ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்து என்னை சந்தித்தார். இருவரும் பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்தோம்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் செலவில் குழு செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இலங்கை அரசின் ஒப்புதல் பெற்றோம். 10ம் தேதி குழு இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள், தவிக்கும் தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அந்த குழு என்னிடம் அறிக்கை தந்துள்ளது. அது தவிர இந்த பயணத்தால் ஏற்பட்ட பயன்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அங்குள்ள முகாம்களில் 2 லட்சத்து 53 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். மழைக்காலம் தொடங்குமுன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று ராஜபக்சேயிடம் குழு வலியுறுத்தியது.

அதை ஏற்று முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். எஞ்சியிருப்பவர்களை படிப்படியாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் உறுதியளித்தனர். அந்த பணி நாளை தொடங்குகிறது. இந்த ஆறுதலான செய்தியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் நிறைய கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு உதவியை கேட்டுள்ளது. அப்படி உதவுவது தமிழர்களின் துன்பத்தை விரைவில் நீக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். அனாதை குழந்தைகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இலங்கை உறுதி அளித்திருக்கிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது என்றார் கருணாநிதி.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்...

கேள்வி - கண்ணி வெடிகளை காரணம் காட்டி இலங்கை அரசு தாமதம் செய்கிறதே?

முதல்வர் - அங்குள்ள தமிழர்கள் பெயரால் இங்குள்ள ஆர்வலர்கள் கூறும் கருத்து அது.

கேள்வி - தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றப் படுவார்களா?

முதல்வர் - அப்படி திட்டம் இல்லவே இல்லை என்று இலங்கை மறுத்திருக்கிறது.

கேள்வி - உண்மையான முகாம்களை காட்டவில்லை. ராணுவம் காட்டிய முகாம்களை மட்டுமே குழுவினர் பார்த்தனர் என்று பாமக கூறியிருக்கிறதே?

முதல்வர் - நமக்கு காரியம்தான் பெரிது. யார் யார் என்ன சொன்னர்கள் என்பதற்கெல்லாம் பதில் கூற முடியாது.

கேள்வி - எம்.பி.க்கள் குழுவுக்கு இலங்கை அரசு வழி காட்டிய விதம் திருப்தியா?

முதல்வர் - திருப்திதான்.

கேள்வி - மழைக் காலத்தில் முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுமா?

முதல்வர் - உடனே ஊருக்கு அனுப்புவதுதான் சரியான பாதுகாப்பு. முடியாத பட்சத்தில் மீதியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

கேள்வி - அனைவரும் வீடு திரும்ப காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

முதல்வர் - முதலில் 58 ஆயிரம் பேர். மற்றவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கேள்வி - முகாம்களில் தமிழர்கள் நிலை என்ன?

பதில் - கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.

கேள்வி - இந்த பயணம் பயன் தராது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

பதில் - பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி - முகாம்களில் சித்ரவதை நடக்கிறதா?

பதில் - போர் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும் சகஜம் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அந்த காலம் அது.

கேள்வி - தமிழக அரசும் மத்திய அரசும் அனுப்பிய நிவாரண பொருட்கள் அந்த தமிழர்களை சேர்ந்திருக்கிறதா?

முதல்வர் - சேர்ந்திருக்கிறது.

கேள்வி - முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்களா?

முதல்வர் - இப்போது இல்லை.

கேள்வி - பிரச்னைக்கு அரசியல் தீர்வு எப்போது ஏற்படும்?

முதல்வர் - அது அடுத்த கட்டம்.

கேள்வி - தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பற்றி ராஜபக்சேவுடன் குழுவினர் பேசினார்களா?

முதல்வர் - அவரிடம் பேச வேண்டியதில்லை.
சோனியாவிடமும், பிரதமரிடமும் பேசியிருக்கிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+