லாகூரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் - 24 பேர் பலி
லாகூர்: தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் லாகூரில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 3 இடங்களில் நடந்த இந்த பயங்கரத் தாக்குதலால் லாகூர் நகரம் ஸ்தம்பித்துப் போனது.
போலீஸாரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாதத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
பயங்கர ஆயுதங்களோடு இன்று காலை லாகூருக்குள் புகுந்த தீவிரவாதிகள், மனவான் போலீஸ் பயிற்சிப் பள்ளி, பெடரல் விசாரணை ஏஜென்சியின் கட்டடம், அதிரடிப்படை போலீஸ் தலைமையகம் ஆகியவற்றுக்குள் புகுந்து தாக்குதல் தொடுத்தனர்.
காலை 9 மணிக்கு நடந்த இந்தத் தாக்குதலில் உளவுப் பிரிவு அதிகாரிகள் பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
பெடரல் விசாரணை ஏஜென்சி அலுவலகத்திற்குள் ஐந்து தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். அந்த அலுவலகத்திற்குள் 2 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். பின்னர் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் குதித்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்குப் பின்னர் சண்டை முடிவுக்கு வந்தது. இங்கு நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மேலும், பெடரல் விசாரணை ஏஜென்சியின் 3 வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
ஒரு தீவிரவாதியின் உடலில் தற்கொலைப் படையினர் போடும் ஜாக்கெட் இருந்தது. அந்த இடத்திலிருந்து சில கையெறி குண்டுகளும், ஒரு தற்கொலைப் படை ஜாக்கெட்டும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, அதிரடிப்படை போலீஸ் தலைமையகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கும் கண்மூடித்தனமாக சுட்டனர். கையெறி குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதேபோல மனவான் போலீஸ் பயிற்சிப் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள், பயிற்சிப் போலீஸார் பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
மூன்று இடங்களையும் தற்போது ராணுவம் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளது. உள்ளே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று சோதனை நடந்து வருகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கூட்டத்தில் 3 பெண்களும் இருந்ததாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
3 தாக்குதல்களிலும் 24 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் தரப்பில் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், வட மேற்கு பாகிஸ்தானிய நகரான கோஹத்தில் காவல் நிலையத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பள்ளிக் குழந்தைகள்.
தலிபான்கள் பொறுப்பேற்பு...
லாகூர் தாக்குதல்களை தாங்களே ஒருங்கிணைத்து நடத்தியதாக டெஹ்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 15 நாட்களில் பாகிஸ்தானில் நடந்துள்ள ஐந்தாவது மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இது என்பதால் பாகிஸ்தான் பெரும் பரபரப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications