மன்மோகனை சந்திக்க விரும்பும் சீன பிரதமர்!!
கடந்த 3ம் தேதி சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்தது. அது தனது நாட்டுப் பகுதி என்றும், மன்மோகன் சிங் அங்கு வந்தது தவறு என்றும் கூறியது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சீனத் தூதரை அழைத்து கண்டனக் கடிதத்தை இந்திய வெளியுறவுத்துறை வழங்கியது.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீர் மின் நிலையம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறும் சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.
4 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, சீன அதிபரிடம் நீர் மின் திட்டத்தை அமைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். இதை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது.
இந் நிலையில் தான் இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியில் பாகிஸ்தான் இந்த நீ்ர் மி்ன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு சீனா துணை போகக்கூடாது. இதனால் இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.
இந் நிலையில் தான் மன்மோகன் சிங்கை சந்தி்க்க ஆர்வமாக இருப்பதாக சீனப் பிரதமர் வென் ஜியாபோ கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார் வென் ஜியாபாவ்.
ஆசியான் கூட்டத்தில் இந்த சந்திப்பு நடந்தால் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
முப்படைத் தளபதிகள் மாநாடு:
இந் நிலையில் சீன விவகாரம் குறித்து விவாதிக்க முப்படைத் தளபதிகளின் ஆலோசனை மாநாடு வரும் 20ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
லடாக் மற்றும சிக்கிம் பகுதிகளில் சீன ராணுவம், விமானப் படையினர் அத்துமீறி வருவது குறித்து இதி்ல் விரிவாக விவாதிக்கப்படும்.
இக் கூட்டத்தில் தரைப்படை, விமானப் படை, கடற்படை ஆகிய மூன்று படைகளின் தலைவர்கள், கமாண்டர்கள், பாதுகாப்பு, உளவுத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
சீனர்களுக்கு விசா கட்டுப்பாடு:
இந் நிலையில் அதிக திறன்மிக்க சீன தொழிலாளர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். இது தவிர்த்து வர்த்தக விசாக்கள் வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இனி சீனர்கள் தொழிலாளர் விசாவில் மட்டுமே இந்தியாவுக்கு வர முடியும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.