வெள்ளை மாளிகையில் தீபாவளி-விளக்கேற்றினார் ஒபாமா

ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோதுதான் தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகை கொண்டாட ஆரம்பித்தது. 2003ம் ஆண்டு முதல் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளை மாளிகையில் விழா நடைபெறாது. மாறாக அருகில் உள்ள கட்டடத்தில் கொண்டாட்டம் இடம் பெறும். மேலும் அதிபரும் வர மாடடார்.
ஆனால் முதல் முறையாக வெள்ளை மாளிகையிலேயே தீபாவளிக் கொண்டாட்டம் இந்த ஆண்டு இடம் பெற்றது. மேலும் அதிபர் பாரக் ஒபாமாவும் முதல் முறையாக தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் விழா நடந்தது. இதில் ஏராளமான ஆசியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்திய வர்த்தக அமைச்சர் அனந்த் சர்மா, தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வெள்ளை மாளிகை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மிட்டாய்களும் வைக்கப்பட்டிருந்தன. எளிமையான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடனம், பாடல் மற்றும் உணவுத் திருவிழா போன்றவை இடம் பெறவில்லை.
விழாவின் இறுதியாக வாஷிங்டனில் உள்ள சிவா - விஷ்ணு கோவில் தலைமைப் பூசாரி சமஸ்கிருத மந்திரங்களை முழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், வருகிற சனிக்கிழமை இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினரில் ஒரு பிரிவினர் அமெரிக்காவிலும், உலகம் எங்கும் தீபங்களின் திருவிழாவைக் கொண்டாடவுள்ளனர். இருளை வென்ற ஒளியின் விழா இது. அறியாமையை அழித்து அறிவு வென்ற நாள் இது.
இது மகிழ்ச்சியான தருணம். தேவையானோருக்கு உதவிட நாம் உறுதி பூண்டு கொள்ள வேண்டிய தருணமும் கூட என்றார்.
பின்னர் அவர் ஹேப்பி தீபாவளி, சால் முபாரக் என கூறியபோது அனைவரும் கை தட்டினர். கோவில் பூசாரி உபநிஷத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தி முடித்த பின்னர் அவருடைய கையைக் குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார் ஒபாமா.












Click it and Unblock the Notifications