தூத்துக்குடியில் அமையும் விமானப் படை தளம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விமான படைத் தளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் பகுதியில் இரண்டாம் உலக்போரின் போது ஆங்கிலேர்கள் பயன்படுத்திய விமானத் தளம் உள்ளது. அந்த விமானத் தளத்தின் ஓடுதளங்கள் இன்னும் உறுதியான நிலையில் காணப்படுகின்றன.
எனவே பன்னீர்குளம் விமான தளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்த இந்திய விமானபடை கமாண்டர் நாயக் தலைமையில் 4 அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தனர்.
பின்னர் அவர்கள் பன்னீர்குளத்தில் உள்ள பழைய விமான தளத்தை பார்வையிட்டனர். பழைய விமானத் தளத்தை மேம்படுத்தி விரிவுபடுத்த அப்பகுதியை சுற்றியுள்ள தென்னம்பட்டி, ஓமனாங்குளம், பன்னிர்குளம், திருமலாபுரம், சங்கரனேரி, சிதம்பராபுரம் ஆகிய 6 கிராமங்களில் 1,533 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பின்னர் விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தை ஓட்டி விமானப் படைக்கு தனியாக விமானத் தளம் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டாங்குளம் கிராம பகுதியில் இதற்காக 61.75 ஏக்கர் நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பன்னீர்குளம் பகுதி மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே விமானத் படை தளம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.