எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.
இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.
முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.
மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.