'நம்பிக்கை சூரியன்' வித்யாஸ்ரீ!
நெல்லை:''நம்பிக்கை சூரியனாயிருந்தால்
சுள்ளி கூட பூப்பூக்கும்''....
பேராசிரியர் கவிஞர். பொதிகை தமிழரசன் எழுதிய கவிதை வரி யாருக்கு பொருத்துமோ இல்லையோ இக்கட்டுரையான நாயகி செல்வி வித்யாஸ்ரீக்கு நிச்சயம் பொருந்தும்.
வித்யாஸ்ரீ...
விழுப்புரம் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த அண்ணாமலைக்கு பிறவிலேயே இரு கரங்களும் இன்றி மகளாக பிறந்தவர். இரு கரங்களை மட்டுமே இழந்தவர், நம்பிக்கையை அல்ல. தன் கால்களை கரங்களாக்கிக் கொண்டு புத்தகப் பையை கழுத்தில் சுமந்து பள்ளிக்கு செல்ல பழகி கொண்டார். தன் வயது சிறார்களின் கரங்கள் அ..ஆ..வை எழுதிய போது இவளது பாதங்கள் அ..ஆ..வை எழுதிட கற்றுக்கொண்டன.
நாட்கள் நகர்ந்தன.. காலங்கள் உருண்டன. 2008-2009 கல்வியாண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு வந்தது. 8,22,872 மாணவ, மாணவிகளோடு இவரும் தேர்வு எழுதினார். 66 சதவீத மதிப்பெண் பெற்று தேர்வில் வென்றார்.
தனது லட்சியம் ஐஏஎஸ் தான் என்கிறார் உறுதியோடு, வெறியோடு வித்யாஸ்ரீ.
வித்யாஸ்ரீ படித்தது ஊனமுற்றோருக்கான எந்த சிறப்பு வசதியும் இல்லாத ஆற்காடு எனும கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான். இவரது தந்தை அண்ணாமலை, தாய் பழனியம்மாள் ஆகியோர் போதிய கல்வி அறிவோ, பொருளாதார வசதியோ இல்லாதவர்கள்.
அண்ணாமலை கட்டிட வேலையில் சித்தாள் வேலை பார்க்கிறார். பழனியம்மாள் வயல்களில் கூலி வேலை பார்க்கிறார். அவர்கள் வாழ்வது ஒரு ஓலை குடிசையில்தான்.
இந்தத் தம்பதிக்கு வித்யாஸ்ரீ, வித்யா பாரதி, ஸ்ரீபவித்ரா, அனிதா மற்றும் ஐஸ்வர்யா (இரட்டை குழந்தைகள்) என 5 பெண் குழந்தைகள். கூலி வேலை பார்த்தாலும் மகள்கள் அனைவரையும் படிக்க வைக்கிறது இந்தத் தம்பதி.
அதில் வித்யாஸ்ரீயையும் இவர்கள் பள்ளிக்கு அனுப்பியது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். வித்யாஸ்ரீயின் கல்வி ஆர்வத்துக்கு முக்கிய காரணமே தாய் வழி பாட்டி வீரம்மாள்தான். பிறரை போல் தன் பேத்தியும் படிக்க வேண்டும் என்று அவரை உற்சாகப்படுத்தி வெற்றி படிக்கட்டுகளில் ஏற வைத்தவர் வீரம்மாள்.
வித்யாஸ்ரீ என்ற நம்பிக்கை சூரியனை வீரவாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் என்பவர் சமீபத்தில் நெல்லைக்கு அழைத்து வந்து ஒரு பாராட்டு விழாவை நடத்தி கெளரவப்படுத்தினார்.
வித்யாஸ்ரீயின் முகவரி:
வித்யாஸ்ரீ
த-பெ. எம். அண்ணாமலை
குளத்து தெரு, ஆற்காடு
விழுப்புரம்-605755