இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஓய்வு?
கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது முதலே அதிபர் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துவிட்டது.
இந் நிலையில், நான் ஓய்வு பெற விரும்புவதால் எனக்கு பணிக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அவர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக 'லக்பிம' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் அவருக்கு 5 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதவியிலிருந்து விலகி பொன்சேகா அரசியலில் குதிக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
'லங்கா' ஆசிரியர் கைது:
இந் நிலையில் கொழும்புவிலிருந்து வெளிவரும் 'லங்கா' வார இதழின் ஆசிரியர் சந்தான சிரிமல்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜக்சே-சரத் பொன்சேகா இடையே வெடித்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து இந்தப் பத்திரிக்கை கடந்த வாரம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டதே இந்தக் கைதுக்குக் காரணம் என்று தெரிகிறது.
அந்தச் செய்தியை எழுதிய நிருபரையும் கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.