விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கு குண்டு மிரட்டல்?
செங்கல்பட்டு: தீபாவளி விடுமுறையை நீட்டிக்கச் செய்ய பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு வேதாசல நகரில் உள்ளது ராமகிருஷ்ணா மிஷனரி மேல்நிலைப்பள்ளி. தீபாவளி பண்டிகைக்காக 16ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பும் எழுதப்பட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. ஆனால், யாரோ சிலர் அதைத் திருத்தி 19ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை எழுதியிருந்தனர்.
இந் நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு தலைமை ஆசிரியர் ஆராமுதன் செல்போனை தொடர்பு கொண்டு ஒரு மாணவன் பேசினான்.
பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது வெடித்தால் கட்டிடம் தரை மட்டமாகி விடும் என்றும் கூறினான்.
இதையடுத்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே நிறுத்தி விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார் தலைமை ஆசிரியர். போலீசார் விரைந்து வந்து வகுப்பறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் குண்டு ஏதும் சிக்கவில்லை. சோதனைக்கு பிறகு பள்ளி இன்று வழக்கம் போல் செயல்பட்டது.
தீபாவளி விடுமுறையை நீட்டிக்க யாரோ ஒரு மாணவர் குண்டுப் புரளியைக் கிளப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவி பெற்றோர்கள் பள்ளிக்கு ஓடி வந்ததால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.