பத்திரிக்கையாளர் வழக்கு- நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உத்தரவு
சென்னை: நடிகர், நடிகையர் மீது பத்திரிக்கையாளர் அமைப்புகள் கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக வர்ணித்துப் பேசியதாக பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி அன்பழகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், நடிகர்கள் விஜயக்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களையம், அவர்களது குடும்பத்தினரையும் மிகவும் தரக்குறைவாக, ஆபாசமாக பேசினர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி உரிய வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் தரப்பட்டது.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு அன்றைய தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications