புலிகள் சரணாலய பகுதிகளில் ஆய்வை துவக்கிய கேரளா!

இதற்காக மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை கேரள அரசு கடந்த 2 வருடத்திற்கு முன்பு தொடங்கி விட்டது. 10 கி.மீ சுற்றளவில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் 7 கி.மீட்டர் கேரள அரசுக்கு உட்பட்ட பகுதியில் இருந்தாதல் அந்த சுற்றளவில் ஆய்வுப் பணி முடிந்து விட்டது.
மீதம் உள்ள 3 கி.மீட்டர் பகுதி பெரியாறு அணை அருகே உள்ள புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். எனவே இங்கு ஆய்வு நடத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியிலும் ஆய்வு பணிகளை தொடங்க முடிவு செய்தோம்.
கடந்த 13ம் தேதி சப்பாத்து பகுதி முதல் புலிகள் சரணாலய பகுதி வரை ஆய்வு பணிகள் முடிந்து விட்டன. இன்று முதல் புலிகள் சரணாலயத்தின் உள் வனப் பகுதியில் ஆய்வு பணிகள் தொடங்கும்.
இங்குள்ள 2.5 ஹெக்டேர் வனப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. 3 மாதத்தில் இப்பகுதியில் ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்படும். வானிலை, வன விலங்குகளின் நடமாட்டம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வு பணிகள் நடத்தப்படும் என்றார்.
கேரள மக்களை பாதுகாக்கவே புது அணை:
இந் நிலையில் முல்லைப் பெரியாரில் புதிய அணைக் கட்டும் முடிவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் புதிய அணையால் தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீர் அளவு பாதிக்காது என்றும், கேரள மக்களின் உயிரைப் பாதுகாக்கவே புதிய அணை கட்டப்படுகிறது என்றும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
மதுரை ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு தரும் தண்ணீரை நிறுத்த கேரளம் முயன்று வருகிறது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆனாலும் மத்திய அரசி்ன் மறைமுக உதவியோடு தனது பணிகளை கேரளம் ஆரம்பித்துவிட்டது.












Click it and Unblock the Notifications