சென்னை விமான நிலையத்தில் 'கருணாநிதி' ரகளை!
சென்னை: சென்னை, பம்மல் நகராட்சித் தலைவரான திமுகவைச் சேர்ந்த வி.கருணாநிதியும், அவரது நண்பர்களும் சென்னை விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டது. நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக ரூ. 200 அபராதமும் விதிக்கப்பட்டது.
பம்மல் திமுக நகராட்சித் தலைவராக இருப்பவர் வி.கருணாநிதி. இவர் தனது நண்பர்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை நகராட்சிக்குச் சொந்தமான காரில் விமான நிலையம் சென்றார்.
வாகனங்கள் வெளியேறும் பகுதி வழியாக கருணாநிதியின் பொலிரோ கார் உள்ளே நுழைந்தது. இதைப் பார்த்த காவல் பணியில் இருந்த சிறப்புப் போலீஸ் படை காவலர் செல்லையா குறுக்கிட்டு இது கார்கள் வெளியேறும் பகுதி, இந்தப் பகுதி வழியாக உள்ளே நுழையக் கூடாது என்று கூறித் தடுத்தார்.
இதைக் கேட்ட கருணாநிதி, இது அரசு வாகனம், அரசு வாகனத்திற்கு விதிமுறையே கிடையாது. எங்கே வேண்டுமானாலும் போகலாம், எப்படி வேண்டுமானாலும் போகலாம், நீ தடுக்காதே என்று கூறியுள்ளார். பின்னர் தனது கார் டிரைவரிடம் காரை நிறுத்தாமல் உள்ளே போ என்று உத்தரவிட்டார்.
உள்ளே நுழைந்த கார் கார்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கொண்டு போய் நின்றது. பின்னர் கருணாநிதி உள்ளிட்டோர் காரிலிருந்து இறங்கி, சர்வதேச முனைய வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் போனது. விரைந்து வந்த அவர்கள், காரை 'டோ' செய்து வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி சங்கிலி போட்டுக் கட்டி விட்டனர்.
கருணாநிதி உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்தபோது கார் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கோபமடைந்த கருணாநிதி, விமான நிலைய அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். இது அரசு கார், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம், எப்படி நீங்கள் செயின் போடலாம் என்று கத்தியுள்ளார். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதை சட்டையே செய்யவில்லை.
நோ பார்க்கிங்கில் கார் நிறுத்தியுள்ளீர்கள். எனவே ரூ. 200 அபராதம் கட்டி விட்டு காரை கொண்டு செல்லுங்கள் என்று கூறி விட்டனர். மத்திய அரசு ஊழியர்களிடம் தனது பப்பு வேகாது என்பதை உணர்ந்த கருணாநிதி, வேறு வழியில்லாமல் அபராதப் பணத்தைக் கட்டி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து விமான நிலைய போலீஸில், காவலர் செல்லையா புகாராகக் கொடுத்தார்.