கோவை சிறையில் கல்லூரி தாளாளர் தற்கொலை
கோவை: ஜான் பாண்டியனை வைத்து நிதி நிறுவன அதிபரை கொலை செய்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையி்ல் அடைக்கப்பட்டிருந்த கல்லூரிகளின் அதிபரான கோடீஸ்வரர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அவினாசி ரோடு வி.எல்.பி. ஹவுஸ் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எல்.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வந்தார்.
இவர் கல்லூரியில் படித்தபோது உடன் படித்த சுனிதா என்ற மாணவியை காதலித்துள்ளார். ஆனால் சுனிதா, வெங்கட்ராமனின் நண்பரான விவேக்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.
படிப்பு முடிந்த பின் வெங்கட்ராமன் கல்லூரிகளைத் துவக்கினார். செர்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
விவேக், ஆர்.எஸ்.புரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வெங்கட்ராமன் அடிக்கடி விவேக் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
ஒருமுறை வீட்டில் தனியே இருந்த சுனிதாவிடம் வெங்கட்ராமன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து விவேக்-வெங்கட்ராமன் இடையே மோதல் ஏற்பட்டது. கணவரின் செயலால் வெறுத்துப் போன செர்ரி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இதனால் வெறியடைந்த வெங்கட்ராமன், விவேக்கை தீர்த்து கட்ட ஜான் பாண்டியனை அணுகினார். ரூ.10 லட்சம் பேரம் பேசப்பட்டது.
கடந்த 1993ம ஆண்டு ஆர்.எஸ். புரத்தில் நடுரோட்டில் விவேக் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்
ஜான் பாண்டியன், வெங்கட்ராமன், கூலிப் படையை சேர்ந்த யூசுப், அப்துல்கரீம், தமிழ்செல்வன், பிரின்ஸ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 10 பேருக்கும் கோவை செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து வெங்கட்ராமன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜான் பாண்டியன் வேலூர் சிறையிலும் மற்றவர்கள் பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்.
சிறையில் வெங்கட்ராமனை வி.எல்.பி. கல்லூரியின் மேலாளரான மலர்விழி அடிக்கடி சந்தித்திப்பது வழக்கம். இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
3 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வந்த வெங்கட்ராமன், ஒரு கோவிலில் வைத்து மலர்விழியை திருமணம் செய்து கொண்டார்.
இதை வெங்கட்ராமனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்கவில்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள் மலர்விழிக்கு செல்வதை விரும்பாத அவர்கள் வெங்கட்ராமனை சிறையில் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்தனர்.
இதனால் மனம் வெறுத்துப் போயிருந்தார் வெங்கட்ராமன் என்கிறார்கள்.
இந் நிலையில் இன்று அதிகாலை தனது அறைக்குள் துணிகளை உலர்த்தும் கயிற்றால் கதவின் மேல் பகுதியில் தூக்கு போட்டு வெங்கட்ராமன் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications