திருமா இதை அங்க சொல்லியிருக்கனும்.. சாமி
சீனாவுக்கு 4 நாள் பயணமாக சென்று வந்தேன். அந்த நாட்டு முக்கிய தலைவர்களுடன் விவாதித்து வந்திருக்கிறேன்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்புகளும் ஏற்படும்.
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பொறுப்பற்றதாகும். இலங்கைக்கு எம்பிக்கள் குழுவோடு சென்றபோது அங்கு பேசியிருக்க வேண்டிய கருத்துக்களை இங்கே வந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
ஒரு எம்பி இன்னொரு நாட்டுடனான உறவை கெடுக்கும் வகையில் கருத்து வெளியிடுவது குற்றமாகும். எனவே அவர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமாவளவனுடன் சேர்ந்து முதல்வரும் சதி செய்வதாக இவர்கள் இருவர் மீதும் நான் வழக்கு தொடருவேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியிலிருந்தும் திமுக வெளியேற்ற வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த 27 அரசியல் கட்சி தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இது பற்றிய பட்டியலை கேட்டு இலங்கை அரசுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அப்படியே உள்ளது. அதற்கு யாரும் தடை பெறவில்லை. எனவே முதல்வர் கருணாநிதி அணையின் உயரத்தை அதிகரிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அவர் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாமல் கேரளாவுடன் சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறார். அணை மட்டத்தை 136 அடியாக குறைத்தபோது அதனால் ஏற்பட்ட காலி நிலப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த பண்ணையார்கள் பங்களாக்கள் கட்டி அங்கே குடியேறி உள்ளார்கள்.
கருணாநிதியும் அவரைச் சேர்ந்தவர்களும் இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் செய்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு கருணாநிதி துரோகம் செய்துள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் பாடம் கற்பிப்பார்கள் என்றார் சாமி.
மின்னணு எந்திரம்-சாமியின் புது யோசனை:
இந் நிலையில் நேற்று முன் தினம் ஜெயா டிவியி் ரபி பெர்னாடுக்கு பேட்டியளித்த சாமி கூறுகையில்,
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் நடப்பது உண்மை. இந்திய மின்னணு உபயோக சட்டத்தின்படி ஒருவர் மின்னணு சாதனம் மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அவருக்கு அதற்கான அத்தாட்சி தரப்பட வேண்டும்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் எதையாவது வாங்கினால் ரசீது தருகிறார்களே.. அது மாதிரி. இது மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துக்கும் பொறுந்தும். அதில் ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்ற அத்தாட்சியை அவருக்குத் தர வேண்டும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த முறையைத் தான் கடைபிடிக்கப் போகிறார்கள்.
அதே நேரத்தில் அந்த அத்தாட்சியைக் காட்டி அவர் யாருக்கு ஓட்டு போட்டாரோ அவர்களிடம் பணம் வாங்கவும் வாய்ப்புள்ளதால் அதை வாக்கு மையத்திலேயே அதிகாரிகள் திரும்பவும் பெற்றுக் கொண்டு அதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் வந்தால் அந்த சீட்டுகளை வைத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தலாம். அதைவிட்டுவிட்டு இப்போது மின்னணு எந்திரத்தையே மீண்டும் மீண்டும் திறந்து எண்ணுகிறார்கள். இதனால் என்ன பயன்.
இந்த மின்னணு சட்டத்தை முன் வைத்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளேன். விரைவிலேயே வழக்கும போடுவேன் என்றார் சாமி.