தொடரும் மனித உரிமை மீறல்கள்- ஐரோப்பிய யூனியன் உறவை இழக்கும் அபாயத்தில் இலங்கை
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் முடக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று இலங்கையை தொடர்ந்து உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா. அமைப்புகள் என தொடர்ந்து பல தரப்பும் இதுதொடர்பாக கூறி வரும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது.
யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல், கல்லுளி மங்கன் போல இருக்கிறார் அதிபர் ராஜபக்சே.
இந்த நிலையில் தமிழர்களை தொடர்ந்து முகாம்களிலையே வைத்திருந்தால் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவை இலங்கை இழக்க நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கையி்ல் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த ஒரு வருடமாக ஐரோப்பிய யூனியன் விசாரித்து வந்தது. இதில் மிகப் பெரிய அளவில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவது உண்மையே என்று அதில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அது தீர்மானித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 உறுப்பு நாடுகளும், இணைந்து, இலங்கைக்கு எதிராக வர்த்தக உறவு மற்றும் சலுகைகள் தடையை விதிப்பது குறித்து நாங்கள் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தக உடன்பாடுகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. தடை விதிக்கப்பட்டால் இவை அனைத்தும் இலங்கைக்குக் கிடைக்காது.
போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும் இலங்கையில் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன.
இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடினமான நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மோசமான பாதிப்பு ஏற்படும்...
ஐரோப்பிய யூனியன், இலங்கைக்கு வர்த்தக தடை மற்றும் சலுகைகள் ரத்து முடிவை அறிவித்தால், இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான அளவில் பாதிக்கப்படும் என தெரிகிறது.
ஏற்றுமதியில் இலங்கையின் மிகப் பெரிய சந்தையாக ஐரோப்பிய யூனியன் விளங்குகிறது. ஜவுளி ஏற்றுமதியின் மூலம் மட்டும் கடந்த ஆண்டு 3.5 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி ஏற்றுமதி தவிர மீன் ஏற்றுமதி மூலமும் இலங்கை பெருமளவில் வருவாயை ஈட்டி வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு சலுகைகள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றன. இவை அனைத்தும் தற்போது ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான போர்க் குற்றச் செயல்கள் உள்ளிட்ட எந்த விஷயம் குறித்தும் விசாரிக்க ஐரோப்பிய யூனியனை அனுமதிக்க முடியாது என திமிராகப் பேசி வருகிறது இலங்கை. இதனால் ஆத்திரமடைந்துள்ளது ஐரோப்பிய யூனியன். இதையடுத்து இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் வர்த்தக உறவில் கை வைக்க அது தீர்மானித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இலங்கை மீதான வர்த்தக உறவு மற்றும் சலுகைத் தடை குறித்து ஐரோப்பியயூனியன் இறுதி முடிவு எடுக்கவுள்ளது.