இந்தோனேசியா: படகிலிருந்து வெளியேற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து மறுப்பு
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகிலிருந்து வெளியேற மாட்டோம் என அதில் உள்ள இலங்கைத் தமிழர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு 254 இலங்கைத் தமிழர்களுடன் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றபோது இந்த படகை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து மேற்கு ஜாவாவுக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் படகை விட்டு வெளியேற தமிழர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தங்களை ஆஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எங்களால் இலங்கையில் வாழ முடியாது. அதுவரை நாங்கள் படகை விட்டு வெளியேற மாட்டோம். மீறி வெளியேற்ற முயன்றால் காஸ் சிலிண்டர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து அனைவரும் மாண்டு போவோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் இழுபறி நிலைமை நீடிக்கிறது. இந்த நிலையில், படகு மூலம் இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்த இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் அகதிகளுக்கும், இந்தோனேசிய அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் தரவில்லை.
தமிழ் அகதிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவர் கூறுகையில், இலங்கையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட பலர் உயிரிழந்து கொண்டிருப்பார்கள்.
நாங்கள் இந்தப் படகில் இன்று பாதுகாப்பாக இந்தோனேசியக் கரையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால் லட்சக்கணக்கான எங்கள் மக்கள் தினசரி அங்கு செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் அங்கிருந்து பல நூறு பேர் தப்பி வெளிநாடுகளில் புகலிடம் கோரிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் நடந்து வருவது இனப்படுகொலை. அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேறி உலக நாடுகளில்தான் தஞ்சமடைய நேரிடும் என்றார்.
கனடாவில் தவிக்கும் 76 அகதிகள்...
இந்த நிலையில், படகு மூலம் கனடாவுக்குத் தப்பி வந்த 76 தமிழ் அகதிகளின் அடையாளங்களை கனடா அதிகாரிகள் வெளியிடாமல் வைத்துள்ளனர்.
ஓசன் லேடி என்று பெயரிடப்பட்ட சிறிய கப்பலில் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி வந்தனர். அவர்களை விக்டோரியாவுக்குக் கொண்டு சென்ற அதிகாரிகள் தற்போது வான்கூவருக்கு அனைவரையும் கொண்டு சென்று சிறை ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கப்பில் வந்த அனைவருமே 15 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் என்று தெரிகிறது.
இதுகுறித்து கனடா தமிழர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகி ராய் ரத்னவேல் கூறுகையில், கப்பலில் வந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அனைவரும் போர் பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் என்று கருதுகிறோம்.
இவர்களால் இலங்கையில் வாழ முடியாது. எனவேதான் வெளியேறியுள்ளனர். போர் முடிவடைந்தவுடன் பல்வேறு மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் வாக்குறுதிப்படி எதுவும் நடைபெறவில்லை.
போரின் முடிவு வேறு பல பிரச்சினைகளின் தொடக்கமாக மாறியுள்ளது. தமிழர்கள் அங்கு 2ம் தர குடிமக்களாக தொடரந்து நடத்தப்பட்டு வருகிறார்கள். அந்த நிலையில், பழைய நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் பிரச்சினைகளும் அப்படியேதான் உள்ளன என்றார்.
வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களிடம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. அதன் பிறகே இவர்களின் எதிர்காலம் என்னவென்பது தெளிவாகும்.
இதுகுறித்து வான்கூவரைச் சேர்ந்த வழக்கறிஞர் டக்ளஸ் கேனான் கூறுகையில், இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், நிலைமை மோசமாகி விடும்.
அதேசமயம் இவர்கள் இலங்கைத் தமிழர்களாக இருந்து அவர்களுடன் யாரேனும் விடுதலைப் புலிகள் கலந்திருந்தாலும் கூட சிக்கல்தான்.
அதேசமயம் இவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறி விட முடியாது. இவர்கள் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் இவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். மரணத்தில் கூட இவர்களின் எதிர்காலம் முடியக் கூடும் என்பதால் அதுகுறித்த யோசனை இப்போதைக்கு கனடா அதிகாரிகளிடம் இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications