வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் - சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
வாசிம் அக்ரமின் மனைவி அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வாசிம் அக்ரம் தனது மனைவி ஹூம் உடன் சென்று கொண்டிருந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் அக்ரம் உள்ளிட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடு வானில் ஹூம் உடல் நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து விமானத்தில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உடன் இருந்த டாக்டர்கள் கூறவே, அருகில் உள்ள நகரில் விமானத்தை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட பைலட்டுகள், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர். இதையடுத்து டெல்லியிலிருந்து அனுமதியைப் பெற்ற சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறையினர் விமானத்தை தரையிறக்க அனுமதித்தனர்.
உடனடியாக சென்னையில் ஆம்புலன்ஸ் விமானம் தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அக்ரமின் மனைவி உள்ளிட்டோர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹூம் சேர்க்கப்பட்டார்.
அக்ரமின் மனைவி அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.