சோனியா பெயரில் மோசடி வசூல் செய்த மதுரை பெண் பிரமுகர்!
மதுரை: காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா பெயரில் மதுரையைச் சேர்ந்த பெண் பிரமுகர் யாழினி என்பவர் மோசடி வசூல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையைச் சேர்ந்தவர் யாழினி. காங்கிரஸ் கட்சிப் பிரமுகர். இவர் பழநி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பெண்கள் சிலரை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து, ஐ.என்.டி.யூ.சி. தேசிய கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தால், லோக்சபாத் தேர்தலுக்கு பின் மத்திய, மாநில அரசிடம், பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்காக நடைபெற உள்ள விழாவிற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பழநிக்கு வருகை தர உள்ளதாக கூறி அதற்கு முன்பணமாக, உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ 450 வசூல் செய்துள்ளார். இதை நம்பி சுமார் 600 பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு தலா ஒரு சேலை இலவசமாக வழங்கி, மதுரையில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்திற்கும் அழைத்து சென்றுள்ளார்.
தேர்தலுக்கு பின்பு, யாழினியை உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு கடன் கேட்டுள்ளனர். பதில் தராமல் சமாளிக்கவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பழனி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, யாழினி பழனி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு எஸ்.ஐ.,மோகன்ராஜ் மற்றும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர் கொடுத்தார்.