சிபிஐ ரெய்ட்.. நான் பதவி விலக மாட்டேன்- ஆ.ராசா
டெல்லி: எனது அமைச்சரவை அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதற்காக நான் பதவி விலக மாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறையாகத்தான் நடந்தது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு கேள்வியும் எழவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் தொடர்பாக டிராய் விதித்த நடைமுறைப்படியே அனைத்தும் நடந்துள்ளன. முறையாக நடந்துள்ளன. பிரதமரின் ஆலோசனைப்படிதான் அனைத்தும் நடந்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் எனக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ எங்குமே குறிப்பிடவில்லை.
நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக அளித்த பதிலையே இப்போதும் வலியுறுத்துகிறேன். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் சரியானதே என்றார் ராசா.
முன்னதாக நேற்று தொலைத் தொடர்புத் துறையின் வயர்லஸ் திட்டப் பிரிவு அலுவலகம், துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது நினைவிருக்கலாம்.