ராசாவை பதவி நீக்க வேண்டும்-பாஜக, இடதுசாரிகள்
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக தொலைத் தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதால் அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதற்குப் பிறகும் ராசா அமைச்சராகத் தொடர்வதை ஏற்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த விஷயத்தில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக வெளிப்படையான, நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த பல மாதங்களாகவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்திற்குள்ளானது. மீடியாத்தளில் இந்தப் பிரசச்னை பெரியதாக பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்த ஊழலை மறைத்து வந்தது.
மத்திய அமைச்சராக ராசா தொடர்ந்தால் சிபிஐ விசாரணை எப்படி நேர்மையாக நடக்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,
சிபிஐ சோதனை நடைபெற்ற பிறகும் மத்திய அமைச்சராக ராசா பதவியில் நீடிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை அவர் தட்டிக் கழிக்க முடியாது.
இந்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமானால் ராசா பதவியில் நீடிக்கக் கூடாது என்றார்.
தெரியலையே... பிரணாப்:
ஆனால், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுரையில்,
மத்திய தொலைத் தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ நடத்திய சோதனை தொடர்பான அறிக்கையை நான் இன்னும் பார்க்கவில்லை.
டிவி, செய்தித் தாள்கள் மூலமே சோதனை நடந்த விஷயமே எனக்குத் தெரியவந்தது. இது குறித்து சிபிஐ அறிக்கையை படித்த பிறகே கருத்து கூற முடியும் என்றார் பிரணாப்.
ஒன்னுமே தெரியாதாம்.. ரொம்ப நல்லவரு..!