முதல்வர் பதவி என்னை தேடி வரும்-ஜெகன் மோகன்
ஹைதராபாத்: எதிர்காலத்தில் மக்கள் ஆதரவோடு நான் முதல்வராவேன் என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஹெலிகாப்டர் விபத்தில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்ததையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக முயன்று வருகிறார்.
ஆனால், அவருக்கு முதல்வர் பதவியைத் தர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து வருகிறார். முதல்வராக்கப்பட்ட ரோசையாவுக்கு ஜெகன் மோகனும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றனர்.
மேலும் மோகனின் ஆதரவாளர்கள் சோனியா காந்தியின் பேனர்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையி்ல் இரு தினங்களுக்கு முன் டெல்லிக்கு அவரை அழைத்த சோனியா அவருக்கு கப்பல் போக்குவரத்துறை இணையமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இதை ஜெகன் மோகன் ஏற்றுக் கொண்டுவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும் அதே அவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
இந் நிலையில் ஹைதராபாத் திரும்பிய ஜெகன் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் தொண்டர்கள் பலர் என்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை, சாதாரண தொண்டனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
எனக்கு இப்போது 36 வயதுதான் ஆகிறது. இதனால் இப்போதே முதல்வர் பதவியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்களின் ஆதரவுடன் கட்சிக்காக கடினமாக உழைப்பேன். எதிர்காலத்தில் முதல்வர் பதவி என்னை தேடி வரும். மக்கள் ஆதரவுடன் முதல்வர் ஆகி மக்களுக்காக பாடுபடுவே்.
இப்போதைக்கு மாநில அரசியலில் இருப்பதையே விரும்புகிறேன். அதைத் தான் தலைமைக்கு எனது வேண்டுகோளாக வைத்துள்ளேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவுப்படி கட்சியில் பணியாற்றுவேன். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆந்திராவில் 41 தொகுதிகளில் காங்கிரசை வெற்றி பெறச் செய்து ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன்.
முதல்வர் ரோசையாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ராஜசேகர ரெட்டி ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை காட்டினார். ஏழ்மையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி திறமையாக செயல்படுத்தினார். அவரது கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்.
விவசாயிகளுக்கு தினமும் 9 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் அளிக்க என் தந்தை முடிவு செய்திருந்தார். அவரது மின் திட்டங்களை நிறைவேற்றுமாறு முதல்வரை வலியுறுத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications